ஒரே நாடு ஒரே தேர்தல் – பொது சிவில் சட்டம் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் ஒற்றுமையை எதிர்கட்சிகள் பலவீனப்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள அவரது சிலை முன்பு தேசிய ஒற்றுமை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் ராணுவத்தினரின் சாகசங்களை கண்டுகளித்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது சிவில் சட்டம் மதச்சார்பற்ற சிவில் சட்டமாக இருப்பதாகவும் ஒரே நாடு ஒரே வரிமுறையான ஜிஎஸ்டி முறையை உலகமே வியந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.ஒற்றுமைக்கான ஒரு முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை எனவும்,
இத்திட்டமும் – பொது சிவில் சட்டமும் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.வளர்ந்து வரும் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க சிலர் பணியாற்றி வருவதாக எதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர்
இந்திய வளர்ச்சியை சிலர் ஒருபோதும் விரும்பவில்லை என குறிப்பிட்டார்.5 தசாப்தங்களாக கேவலமான அரசியலை சிலர் செய்ததாகவும், இந்த நகர்ப்புற நக்சல் கும்பல்கள் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதையும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறுவதையும் கூட இந்த நகர்ப்புற நகர்ப்புற நக்சல்வாதிகள் விமர்சித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

