நியூயார்க்
அமெரிக்காவில் சிறப்பு குடியுரிமை பலன்களை பெறுவதற்காக விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். யு விசா எனப்படும் இந்த சிறப்பு விசாவானது, சில வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டோ அல்லது மனம் அல்லது உடல் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்காக வழங்கப்படும்.
அவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக, இந்த விசாக்களை பெற முடியும். இந்த யு விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் சட்டப்படி அமெரிக்காவில் பணியாற்ற முடியும். 5 முதல் 10 ஆண்டுகளில் அவர்கள் கிரீன் கார்டு பெறவும் தகுதி பெற்று விடுவார்கள்.
இந்த சூழலில், 11 இந்தியர்கள் ஒரு குழுவாக இருந்து கொண்டு, இந்த யு விசாவை பெறும் நோக்கில் கொள்ளை நாடகம் போட்டது தெரிய வந்துள்ளது. இதன்படி இவர்களில் சிலர் விரைவு உணவு விடுதிகள், மதுபான கூடங்கள் மற்றும் கடைகளில் இருக்கும்போது, இந்த குழுவை சேர்ந்த ஒருவர் இவர்களிடம் வருவார்.
அவர் போலியான ஆயுதங்களை காட்டி, மிரட்டி பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விடுவார். அவருடைய கூட்டாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் போல் நாடகம் ஆடுவார்கள்.
ஆனால், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் என்பதும், திட்டமிட்டு இந்த கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இந்த 11 இந்தியர்களில் 6 இந்தியர்கள் மஸ்ஸாசூசெட்ஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். போஸ்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேர் கென்டகி, மிசோரி மற்றும் ஓஹியோ பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிக அளவாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ரூ.2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.
