கரூர்,
கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று மாலை கல்லூரி பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளியணை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கல்லூரி பஸ் கடக்க முற்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் கல்லூரி பஸ் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த தண்டவாளத்தில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி கற்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் வேகமாக வந்தது. அந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய கல்லூரி பஸ் மீது மோதியது. இந்த சம்பவத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பஸ் சேதமடைந்தது. இதில் பஸ்சில் இருந்த 18 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தையறிந்து விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களிடம் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி நேரில் நலம் விசாரித்தார். மேலும் அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
