ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த பண்ணை வீட்டை ‘போதைப்பொருள் சட்ட அமலாக்கத்திற்கான சிறப்பு அதிரடிப் படை மற்றும் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது போலீசாரைத் தடுக்க முயன்ற ஒரு தொழிலதிபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சுதாரித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த நள்ளிரவு விருந்தில் முக்கியத் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், பங்கேற்றவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாக தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த 11 பேருக்கும் போதை மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி உள்ளிட்ட சிலருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அங்கிருந்த ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி மந்திரி புட்டா மகேஷ்க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் பயன்படுத்தவில்லை என்ற முடிவுகள் வந்தாக கூறப்படுகிறது.
அனைவர் மீதும் பிஎன்எஸ் 109, ஆயுதச் சட்டம், என்டிபிஎஸ் (22) மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
