டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் சிஎஸ்ஐஎஃப் படையினர் என்னை தடுத்து நிறுத்தினார்கள் என்று திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்று மாலை 3 மணியளவில் நான் நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஎஸ்ஐஎஃப் பாதுகாப்பு படையினர் என்னை தடுத்து நிறுத்தினார்கள்.
‘இங்கு வந்ததற்கான நோக்கம் என்ன?’ என்று எங்களிடம் விளக்க வேண்டும் என்று கேட்டனர். சிஎஸ்ஐஎஃப் பணியாளர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. நான் அலுவல்பூர்வமான பணிகளை மாநிலங்களவை தலைவரிடம்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல.
தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக உள்ள ஒருவரிடம் சிஎஸ்ஐஎஃப் பாதுகாவலர்கள் நடந்துகொண்ட விதம் தவறு. இதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்கள் யாரும் இப்படி செய்ததில்லை.
ஆனால் இப்போதுள்ள பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது. என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சிஎஸ்ஐஎஃப் வீரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்துல்லா கூறியுள்ளார்.
திமுக எம்பியை சிஎஸ்ஐஎஃப் படையினர் அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 2 இளைஞர்கள், மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு இருந்த எம்பிக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாதுகாப்பு படையினர் அவர்களை உடனடியாக பிடித்ததால் நல்லவேளையாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை சோதனை செய்தபிறகே அனைவரும் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

