பெய்ரூட்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது. இதனால், அண்டை நாடுகளுடன் ஈரான் மோதல் போக்கை கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து, ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானின் ஆதரவை பெற்று செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டு மையங்களை இஸ்ரேல் தகர்த்துள்ளது.
இந்த சூழலில், ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு மையங்களை வான்வழியே இஸ்ரேல் இன்று தாக்கி அழித்துள்ளது. லெபனானின் தெற்கே அல்-கத்ரானி பகுதியில் இருந்த ஹிஸ்புல்லாவின் பல்வேறு ஏவுதளங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டன. இதனால், லெபனான் நாடும், மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
