சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) என்ற வீதம், 48 பறக்கும் படைகளும் (FST), 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (SST) ஏற்படுத்தப்பட்டு, இக்குழுவினர் மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை மேற்கொள்வார்கள். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அதன்படி, இன்று (16.03.2026) நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,29,000/-மும், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,16,000/-மும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.55,000/-மும் என மொத்தம் ரூ.3,00,000/- ரொக்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
