18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளைய தினம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனல் பறக்க நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவின் காசர்கோடு தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற போது, ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு இரு வாக்குகள் பதிவானதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UDF என இரு தரப்பு சார்பிலும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது.
தொடர்ந்து EVM-VVPAT 100% சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பத்திரிகை செய்தியுடன் கேரளாவின் பிரச்சினையை எடுத்துக் கூறினார். இதையடுத்து 2 வாக்குகள் பதிவானது தொடர்பாக விசாரிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்ணா வலியுறுத்தினார்.

