அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தின் பேச்சிற்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தின் சமீபத்திய பேச்சுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகத்தின் பேச்சைக் கண்டித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி., “அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்,” என்று மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு
அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களைக் குறிவைத்து தரக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பதாக திமுக தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறிவிட்டதாகவும், இது போன்ற நபர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்காமல் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இது போன்ற தனிநபர் விமர்சனங்கள் தேர்தல் களத்தின் போக்கையே மாற்றி வருகின்றன. சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு திமுகவின் மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
