திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் கீரிப்பிள்ளை கடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
முக்கிய அம்சங்கள்:
- 7 வயது சிறுவன் நவீன்
- கீரிப்பிள்ளை கடித்த சம்பவம்
- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
7 வயது சிறுவன் நவீன்
திருவாரூர் அம்மையப்பன் புதுத்தெருவைச் சேர்ந்த முத்து மற்றும் தேவி தம்பதியரின் மூத்த மகன் நவீன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். 7 வயதான நவீனுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது. அதிக காய்ச்சலுடன் மூச்சு விட சிரமப்பட்டதால், பெற்றோர் உடனடியாக சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
கீரிப்பிள்ளை கடித்த சம்பவம்
அங்கு சிறுவன் நவீனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.பின்னர், சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைக்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நவீனை கீரிப்பிள்ளை கடித்த சம்பவம் நடந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முத்து தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில், அவற்றை பிடிக்க இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கீரிப்பிள்ளை, தூங்கிக்கொண்டிருந்த நவீனின் கையை கடித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் தொடர் சிகிச்சை
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.தொடர்ந்து சிறுவன் நவீனுக்கு கீரிப்பிள்ளை கடித்த இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கடுமையான வலியால் சிறுவன் துடித்ததுள்ளான்.
சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அப்போது அருகிலிருந்த மருந்தகத்திற்கு சென்ற பெற்றோர் அவசரமாக ஒரு ஊசி போட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுவனுக்கு வலி சற்று குறைந்துள்ளது. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து, சிறுவனின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.தொடர்ந்து, அதிக காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், அவசரமாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனிப்பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
ஆனால் சிறுவன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. தொடர்ந்து, சுவாசிக்க சிரமப்பட்ட சிறுவன், உடல் பகுதிகள் செயல் இழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீரிப்பிள்ளை கடித்த சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட இந்த துயர மரணம், அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடிக்கடி ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு மக்கள் பாதுக்காப்பை உறுதிச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
