சென்னை மாநகராட்சி சார்பில் நகரத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நகரம் முழுவதும் சுமார் 800 இடங்களில் சாலை சந்திப்புகளை சீரமைத்து, போக்குவரத்தை எளிதாக்கவும், குறிப்பாக நடைபாதை பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சிக்கல் குறையும்
இந்த திட்டம் பஸ் ரூட் சாலைகள் பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பஸ் ரூட் சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அந்த சந்திப்புகளில் சாலை அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் வாகன ஓட்டத்தை சீரமைப்பதுடன், பாதுகாப்பு சிக்கல்களையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள இடங்கள்
முதற்கட்டமாக அண்ணா சாலை, ஈவிஆர் பெரியார் சாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் ஹைரோடு போன்ற முக்கிய சாலைகளில் உள்ள சந்திப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முதலில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெல் மவுத் திட்டம்
இந்த சந்திப்புகளில் வாகனங்கள் திரும்பும் இடங்களை விரிவுபடுத்துவது, சாலை வடிவமைப்பை மாற்றுவது மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக பெல் மவுத் என்றழைக்கப்படும் சந்திப்பு வாயில்களை விரிவுபடுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
விபத்துகளை குறைக்க உதவும்
இதன் மூலம் வாகனங்கள் திரும்பும் போது ஏற்படும் நெரிசல் குறையும். அதேபோல் சாலை அமைப்பில் மாற்றங்கள் செய்து வாகனங்கள் சீராக நகரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் வாகன ஓட்டத்தை சீராக்குவதோடு, விபத்துகளை குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
இதனுடன் பாதசாரிகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிக நெரிசல் உள்ள சந்திப்புகளில் சாலை கடக்கும் போது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான நடைபாதை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையவும், மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் வழி ஏற்படும்.
மாற்று திட்டங்கள்
இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்படும் ஆலோசகர், சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வார். தற்போதைய போக்குவரத்து நிலை, வாகன ஓட்டம், சாலை அகலம் மற்றும் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மாற்று திட்டங்களை முன்வைப்பார். மேலும் இந்த பணிகளுக்கான செலவு மதிப்பீடும் தயாரிக்கப்படும்.
போக்குவரத்தை சீரமைக்க முயற்சி
மாநகராட்சியின் இந்த முயற்சி, நகரத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை சீரமைத்து, விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி-மினி ஏசி பஸ் திட்டம்!
திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, அவற்றை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், சென்னை நகரின் போக்குவரத்து அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
