அமலாக்கத்துறையினர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்த சம்பவத்திற்கு ஜெர்மனி கருத்து தெரிவித்திருந்த நிலையில், இது இந்தியாவின் உள்விவராங்களில் அப்பட்டமான தலையீடு என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், தற்போது அதிரடியாக முதலமைச்சர் கெஜ்ரிவாலையும் கைது செய்தது. இதைதொடர்ந்து 6 நாள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளையில், கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்யவில்லை, சிறையில் இருந்தபடியே சட்டப்போராட்டம் நடத்துவேன் என தெரிவித்தார். இதனிடையே அவரது கைதுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதோடு, சம்பவத்தில் கருத்து தெரிவித்த ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், இந்திய ஜனநாயக நாடு என்பதால் கெஜ்ரிவால் பாரபட்சமற்ற விசாரணையை பெறுவார் என எதிர்பார்கிறோம் என தெரிவித்து இருந்தது.
இதைதொடர்ந்து, ஜெர்மன் தூதரகத்தின் துணை தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலரை டெல்லி சவுத் பிளாக்கிற்க அழைத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது இந்தியாவின் உள்விவராங்களில் அப்பட்டமான தலையீடு எனக் கூறி ஜெர்மனியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

