ஏப்.1-ம் தேதி முதல் முட்டைகளில் காலாவதி தேதி கட்டாயம்: உத்தரபிரதேச அரசு அதிரடி

லக்னோ,

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகள், உள்நாடுகளில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில், கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் வாங்கிய முட்டைகள் அழுகி இருந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரிய சோதனை நடத்தாததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பேரில், ஏப்ரல் 1-ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் முட்டைகளில் காலாவதி தேதி அச்சிடுவது கட்டாயம் என முடிவு எடுக்கப்பட்டு, அது உத்தரவாகவும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பப்படும் அனைத்து முட்டைகள் மீதும் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் கோழிப்பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் காலாவதி தேதி அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலாவதி தேதி இல்லை என்றால், முட்டைகள் திருப்பி அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளதால், முட்டை விற்பனையில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Source link