சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன், மற்றும் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குழந்தைகள் நல உரிமைகள் அமைப்பு, திருநங்கை பிரதிநிதிகள், சமுதாய பிரதிநிதிகள், சிறுபான்மை அமைப்பு மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர்.
