சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் இடையே மோதல், கைகலப்பு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்கள் நேர்காணலையும் திமுக நேற்று தொடங்கியுள்ளது.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடைபெற்றது.

அப்போது கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அந்த தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் வேட்பாளர் நேர்காணலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். அதேவேளை, கிள்ளியூர் தொகுதியை கடந்த முறை காங்கிரசுக்கு கொடுத்துள்ளோம், இந்த முறையும் காங்கிரசுக்கு கொடுத்தாலும் வெற்றிபெற செய்வோம் என்று மு.க.ஸ்டாலினிடம் அந்த தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளனர்.

திமுகவில் இரு தரப்பினரும் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்த நிலையில் இரு தரப்பினரும் அண்ணா அறிவாலயத்தைவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது திமுக நிர்வாகிகள் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவரை தாக்கி கைகலப்பில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Source link