சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் வெளியீடாக வர திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சென்சார் தொடர்பான காரணங்களால் தாமதமாகி தற்போது வெளியாக உள்ளது.
விஜய்க்கு நண்பனாக நடித்த அமைச்சர் ஸ்ரீநாத்
இந்தப் படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், தற்போது தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்க்கு இஸ்லாமிய நண்பனாக நடித்துள்ளேன். நண்பனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும், தேவைப்பட்டால் உயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,” என்றார்.
பிரியாணி குறித்து சுவாரஸ்ய பேச்சு
தொடர்ந்து பேசிய ஸ்ரீநாத், “இஸ்லாமியர்களின் பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல விஜய்க்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான உணவு,” என்று சிரிப்புடன் கூறினார். அவரது இந்த பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்களை ரசிக்க வைத்தது.
நட்சத்திர பட்டாளம்
எச். வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், தமிழக அமைச்சரான அருண் ராஜ் ஒரு சிறப்பு காட்சியில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்திலும், திரையுலகிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
