நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சோனம் வாங் சூக் கைதுக்கு அரசியல் ஆர்வலர்கள் மட்டும் இன்றி திரைபிராபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குறித்த சர்ச்சை நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட சோனம் வாங்சுக்
கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும், தேசிய அளவிலான தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவரது உடல்நிலை தற்போது நிலையாக இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு
சோனம் வாங்சுக்கை அவரது விருப்பத்திற்கு மாறாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும் பல்வேறு சமூக அமைப்புகளும் விமர்சித்துள்ளன. அதேநேரம், உடல்நலக் காரணங்களாலும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் அவரை மருத்துவமனைக்கு மாற்றியதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழகமுதல்வர்விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பல அமைப்புகள் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பாத்திமா பாபு, தென்னவன், மாறி செல்வம், குணசீலன், நெய்தல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கெபிஸ்டன், அனைத்திந்திய தொழிற்சங்க மைய தேசிய குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத், மனோன்மணி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
_நயினார் நாகேந்திரன் மீது சந்தேகமாக இருக்கு_- Vck சங்கத்தமிழன்
சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சம்பவம், நீட் தேர்வு மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்வு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மாணவர்களின் எதிர்காலம், கல்வி அமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் கவனம் திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது, போராட்டங்கள் மேலும் தீவிரமடைகிறதா என்பதும் அரசியல் மற்றும் கல்வித்துறை வட்டாரங்களில் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது.
Source link
