சென்னை,
இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிக்கபட்டு வருகின்றது. கடந்த 2012-ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணை 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.
