திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் துவங்கியுள்ளது. இதில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் பேசியுள்ளார் ஓபிஎஸ்.
சட்டபேரை தேர்தலுக்காக பிரம்மாண்டமாக கூட்டணியை அமைத்து, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அரசியல் களத்தில் பெருமளவில் பேசப்பட்டது. அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த இவர், கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்ட பின்பு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்தார்.
இதனையடுத்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு பெருமளவில் முயற்சி செய்தார். ஆனால் இபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்ட நிலையில், திமுகவில் இணைந்து அதிரடி காட்டினார் ஓபிஎஸ். தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருடைய இந்த முடிவினை அதிமுக மற்றும் பாஜகவை சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஓபிஎஸ் பதவிக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார் என்றெல்லாம் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதோடு எடப்பாடி பழனிசாமி குறித்தும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்துள்ளார் ஓபிஎஸ்.
ஆபாசங்களை அவதூறுகளையும் அள்ளி இறைக்கிறார்கள்.. அதிமுகவினரின் வரம்பு மீறிய பேச்சு.. முதல்வர் கடும் கண்டனம்
இவரை இன்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம் மாண்புமிகு தளபதி, தமிழகத்தின் முதலமைச்சர் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் நன்மைகள், திட்டங்கள் அமைத்து பரவலாக பேசப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. அத்தனை திட்டங்களும் அற்புதமான திட்டங்கள் என மக்கள் பாராட்டி வருகின்றனர்.
உறுதியாக இரண்டாவது முறையாக தளபதி அரியணையில் ஏறுவார். இவ்வாறு ஓபிஎஸ் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இதனிடையில் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து மாற்று கட்சியை சார்ந்த 50,000 பேரை திமுகவில் இணைப்பதற்காக பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அதிமுக, அமமுகவை சார்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஓ. பன்னீர்செல்வம் திமுக சார்பாக பிரச்சாரத்தை துவங்கினார்.
தென் மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் விதமாக அவர் தன்னுடைய பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதில் அதிமுகவையும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதோடு இந்த சுற்றுப்பயணத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் ஓ.பி. எஸ் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
