சட்டமன்ற தேர்தல் 2026 – திரள் நிதி கேட்டு காணொளி வெளியிட்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்! – assembly election 2026 naam tamilar katchi coordinator seeman seeking crowdfunding

வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க மக்களிடம் திரள் நிதி கேட்டு காணொளி வெளியிட்டு இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Seeman seeking Crowdfunding(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு போட்டியாளர்களுடன் தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். திமுகவின் விருப்பமான கொடுத்தவர்களுக்கான நேர்காணல் ஒருபுறம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை ஒரு புறம் என திமுகவும் அதன் தலைமையும் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் பரப்புரை, ஆர்ப்பாட்டம், திமுகவுக்கு எதிரான போராட்டம், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை என அது ஒரு புறம் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் நாம் தமிழர் கட்சியும் சமீபத்தில் திருச்சியில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய நாம் தமிழர் கட்சி கூட்டணி ஏதும் இல்லாமல் தனித்தே தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அங்கீகாரத்தையும் பெற்றது.
இந்த சூழலில்தான் அரசியலுக்கு புதியவரான தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் பெரியாரை தனது கொள்கை தலைவராக அறிவித்ததில் இருந்து அதுவும் நடக்கவில்லை. சொல்லப்போனால் விஜய்யை தற்போது கடுமையாக விமர்சிக்க கூடிய நபர் என்றால் அது நாதக பேச்சாளர் சாட்டை துறைமுருகன் தான்.
இதற்கிடையில்தான் தேர்தலை சந்திப்பதற்காக மக்களிடம் திரள்நிதி கேட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த காணொளியில் வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்தே போட்டியிடுவதாக தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை சேமித்து அதை பதுக்கி தேர்தலுக்காக ஒதுக்கியும் வைத்திருக்கின்றன என கூறிய அவர் மறுபடியும் தேர்தல் சமயங்களில் அந்த பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தை கைப்பற்றுவதாக விமர்சித்து இருந்தார். மேலும் அவர் பேசுகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடி 40 கோடி என முதலீடு செய்வதாக தெரிவித்தார். மேலும் “ இந்த கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டும், என்ற கனவோடு நாம் தமிழர் கட்சி களத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்த அவர் பேசுகையில், “ ஒரு தொகுதிக்கு 30 கோடிகள்வரை முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகின்ற நாங்கள் அந்த வட்டிக்காசை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்”என உருக்கமாக பேசியிருக்கிறார்.
மேலும் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலம் மற்றும் உண்மையும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கவே தொடர்ந்து இந்த களத்தில் நாம் தமிழர் நின்று வருவதாக தெரிவித்தார். பசி,பஞ்சம், ஊழல், லஞ்சம்,கொள்ளை, கொலை, சாதி, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, இயற்கை வளக்கொல்லை, மது, போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசத்திற்காக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்பதாக அவர் பேசி இருந்தார்.
மேலும் எப்போதும் போல எனது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த எங்களுக்கு நீங்களே பணம் பணமாகவும் வலிமையாகவும் நிற்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டு இருந்தார். திரள்நிதி மூலமாக உங்களால் இயன்ற உதவிகளை செய்து களத்தில் நிற்கும் எங்களுக்கு உறுதியை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.