பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக விற்பனை

திண்டுக்கல்  மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 5-வது நாளாகக் விசாரணை நடத்தி வருகின்றனர்.

​வழக்கின் மிக முக்கிய நகர்வாக, முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட 1.40 ஏக்கர் இடத்திற்குச் சிபிசிஐடி மாவட்ட கண்காணிப்பாளர் (SP) சஜிதா, துணைக் கண்காணிப்பாளர் (DSP) அஜய் தங்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அந்த 1.40 ஏக்கர் இடத்தில் நேரடியாக நின்று நிலத்தின் எல்லைகள், வரைபடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு விபரங்களைக் கையில் உள்ள கிரையப் பத்திர ஆவணங்களோடு ஒப்பிட்டு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ​இட ஆய்வு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி சஜிதா மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேராகப் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குத் திரும்பினர்.

கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும், அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் ஒப்பிட்டுச் சிபிசிஐடி போலீசார் மீண்டும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Source link