தமிழக சட்டமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வேட்புமனுதாக்கல் 30-ம் தேதி தொடங்க உள்ளதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்ய திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுகவில் ஓரளவிற்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அதிமுகவில் தொகுதி பங்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
பாஜக, பாமக, அமமுக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக திரைமறைவில் நடத்தி வருகிறது. பாஜக பொறுத்தவரை 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நினைக்கிறது. இல்லையென்றால் 40 தொகுதிகளில் ஆவது தாமரை களம் இறங்க வேண்டும் என கமலாலயம் தரப்பு நினைக்கிறது. ஆனால் 28 தொகுதிகளுக்கு மேல் தர எடப்பாடிக்கு மனமில்லை.
அதுமட்டுமின்றி, அதிமுகவிற்கு சாதகமான தொகுதிகளை பாஜக கேட்கிறது. இதனாலும் தொகுதி பங்கீடு செய்வதில் அதிமுக-பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு பியூஷ் கோயல் டெல்லியிலிருந்து சென்னை வர இருந்த நிலையில், பயணம் ரத்து ஆனது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி காலையில் டெல்லி பயணம் சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்துவிட வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். ஆனால் பாஜக கேட்கும் தொகுதிகளால் சிக்கல் நீடிப்பதால், அதற்கு தீர்வு காண உள்துறை அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி டெல்லி கிளம்பி சென்று இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

