பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக வேட்பாளர் வழக்கு சென்னை, பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனித்தனியே வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தவெக தலைவர் விஜய், தனது வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால், விஜய் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முதல்வருக்கு நோட்டீஸ் இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என்று, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இதனை அடுத்து, முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
