பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் ஒப்புதல்
ஈரான் தாக்குதலில் 100 வீரர்கள் காயமடைந்துள்ளதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. குவைத், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜூலை 7-ம் தேதிக்கு பிறகு நடந்த தாக்குதலில் இவர்கள் காயமடைந்ததாகவும், இவர்களில் சுமார் 96 சதவீதம் பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வீரர்களின் நலன் கருதி, காயமடைந்தவர்களின் விவரத்தை வெளியிடுவதில் வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து: 7 பயணிகள் பரிதாப பலி
வியட்நாமில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். லம் டான்க் மாகாணத்தில் இருந்து சிமிங் நகருக்கு 24 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து, டாங் நாய் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென வேகமாக பரவியதால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தனர். எனினும், 7 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 5 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 23 பேர் பலியாகியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நூரிஸ்தான் தலைநகர் பரூன் உள்பட மகாணம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இதில், இடிபாடுகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆப்கனில் மொத்தமுள்ளை 34 மாகாணங்களில் 10 மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
