நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைய துவங்கியுள்ளது. இதனிடையில் நீட் தேர்வே வேண்டாம் என்பது தான் தங்களுடைய நிலைப்பாடு என திமுக மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பங்கேற்றுள்ளார். அதே போல் சென்னையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
நீட் மற்றும் நுழைவு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பை சார்ந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயற்சித்த நிலையில், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையில் அனுமதியின்றி போராடும் மாணவ அமைப்பை சார்ந்தவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, படத்தில் ஹீரோவாக இருப்பார். நிஜத்தில் வில்லனாக இருப்பார் என்பது தான் தெரிய வருகிறது. இவரை நம்பி எப்படி ஓட்டு போட்டாங்க. ஹீரோ வந்தாருன்னா நாட்டை திருத்திடுவார், மாற்றுவார் என நம்பியவர்களுக்கு தோலுரித்து காட்டும் விதமாக இன்றைக்கு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினத்தில் SFI அமைப்பினர் போய் நிற்குறாங்க. ஆர்ப்பாட்டம் துவங்கப்படவே இல்லை.
ஆனால் அதற்கு முன்னதாகவே வலுக்கட்டாயமாக அவர்கள் கைது செய்யபடுகிறார்கள். இவ்வளவு அராஜக போக்கு என்பது தமிழ்நாட்டில் எந்த ஆட்சி காலத்திலும் இருந்ததே கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார் வீரமணி. மேலும் ஆர்ப்பாட்டம் என்றால் அவர்களுக்காக இடம் ஒதுக்கி, அனுமதி கொடுப்பது தான் இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்தது. ஆனால் அதனை காது கொடுத்து கூட கேட்காத இந்த சோஃபா மாடல் அரசினை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆரம்ப காலத்தில் இருந்தே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் கொண்டு வரப்பட்டது. இப்படி மாணவர்களின் உள்ளத்தை புரிந்த தந்தையாக மு.க. ஸ்டாலின் இருந்து வந்தார். இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். அவர் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்க கூட பாசிச பாஜகவோ, தவெக அரசோ முன்வரவில்லை.
பிறகு என்ன காரணத்திற்காக இவர்கள் ஆட்சியில் உள்ளார்கள். தொடர்ந்து மாணவர்களை ஏதோ பாகிஸ்தானை பார்ப்பதை போல் மாணவர்களை அடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈவு, இரக்கம் இல்லாமல் லத்தி சார்ஜ் பண்றாங்க. மக்களுடைய உணர்ச்சிகளை காது கொடுத்து கூட முட்டாள் அரசாக தவெக, பாஜக உள்ளது எனவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் வீரமணி. அதோடு நீட்டுக்கு எதிராக எங்கு போராட்டம் நடந்தாலும் ஆதரவு தருமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகவும் திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
