கோவை,
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் அதிகரித்து வருகிறது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் நிலை, தற்போதே இருக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டம் அன்னூர் அருகே கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், 12 மணி நேரம் கடந்தும் பனிக்கட்டிகள் கரையாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மற்றும் கப்பக்கிழங்கு பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
