இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே எங்களுக்கு முதன்மையானது.வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்கிட சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினர் மிக தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்.
நாடாளுமன்ற முற்றுகை மற்றும் இளைஞர்கள் மீது தடியடி
போராட்டத்தின் அடுத்தகட்டமாக, டெல்லி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரம்மாண்ட பேரணியாகச் செல்ல முயன்றனர். இருப்பினும் பேரணிக்குக் காவல்துறை அனுமதி அளிக்காததால் அவர்களை எல்லைகளிலேயே தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்தினர்
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்துத் தொடர்ந்து முன்னேற முயன்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்தில் பல மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டதுடன், சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு
மாணவர்கள் மீதான காவல்துறையின் இந்த அதிரடித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்திற்குப் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்படப் பல பிரபலங்களும், திமுக, ஆம் ஆத்மி போன்ற முக்கிய அரசியல் கட்சிகளும் நேரடி ஆதரவைத் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நிலைமை மிகவும் பதற்றமடைந்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு
நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, இறுதியாக இது குறித்துப் பேசி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை உடனடியாக அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனையும், அவர்களின் கல்வி எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகத் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாகத் தப்ப முடியாது; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர் போராட்டத்தில் மாணவர்கள்
இருப்பினும் இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா போராட்டக்காரர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
Source link
