2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதி இருந்தது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தபால் வாக்கு தொடர்பாக எழுந்த சர்ச்சை
தேர்தல் முடிவுக்குப் பிறகு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குரிய ஒரு தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அதே பெயரிலான சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல்போனதே தனது தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறி, அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனுத் தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய வாக்களிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்துதேர்தல்ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வேறு தொகுதிக்கு சென்றதாகக் கூறப்படும் தபால் வாக்கை திறக்காமல் சீல் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தலையீடு
உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன் மூலம் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வின் சட்டமன்ற செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடு தற்காலிகமாக நீக்கப்பட்டது.
இதற்கிடையில், தேர்தல் முடிவை எதிர்த்து பெரியகருப்பன் தனியாக தேர்தல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
மறு எண்ணிக்கை மனு திரும்பப் பெறப்பட்டது
இந்தச் சூழலில், தேர்தல் முடிவு தொடர்பான விரிவான தேர்தல் வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் கருத்தில் கொண்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த தனி மனுவை திரும்பப் பெற பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் மறு எண்ணிக்கை கோரிய தனி வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான முக்கிய சட்டப் போராட்டம் தேர்தல் மனு விசாரணை மூலமாகவே தொடர உள்ளது.
