புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தனித்து களம் காண்கிறதா லட்சிய ஜனநாயக கட்சி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
இதே கூட்டணி தொடரும்
தற்போதைய அரசியல் சூழலில், புதுச்சேரி என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்தத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸிற்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளைப் பிரிப்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இதில் பாஜக 10 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் போட்டியிடத் திட்டமிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களை லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு (LJK) ஒதுக்க பாஜக மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.
முட்டுக்கட்டை
ஆனால், இந்தத் திட்டத்திற்கு ரங்கசாமி முட்டுக்கட்டை போட்டுள்ளார். லட்சிய ஜனநாயகக் கட்சியை எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் இணைக்கக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார். ஒருவேளை பாஜக லட்சிய ஜனநாயகக் கட்சியை வற்புறுத்திச் சேர்த்தால், தாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். ரங்கசாமியின் இந்த அதிரடி நிலைப்பாட்டால் பாஜக மேலிடம் சற்று அதிர்ச்சியடைந்துள்ளது. சமரச முயற்சியாக, லட்சிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்களுக்கு பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கலாம் என்ற மாற்று யோசனையையும் ரங்கசாமி ஏற்க மறுத்துவிட்டார்.
இறுக்கமான சூழல்
இந்த அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, புதுச்சேரி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் விபின் ஆகியோரைச் சந்தித்து நிலைமையை விளக்கினர். டெல்லி தலைவர்களின் ஆலோசனையைப் பெற்றுத் திரும்பியுள்ள புதுச்சேரி பாஜகவினர், மீண்டும் ரங்கசாமியைச் சந்தித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரங்கசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதால், கூட்டணிக்குள் ஒருவித இறுக்கமான சூழல் நிலவுகிறது.
உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்
இத்தகைய பரபரப்பான சூழலில், லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘தர்பூசணி’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், காமராஜ் நகர் தொகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தர்பூசணியைப் படைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தேர்தல் களத்தில் அவர்கள் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதிருப்தி
என்.ஆர். காங்கிரஸின் தொடர் எதிர்ப்பால் அதிருப்தியடைந்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சி, தற்போது புதுச்சேரியின் அனைத்து 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ரங்கசாமியின் இந்த விடாப்பிடியான எதிர்ப்பு, வரும் தேர்தலில் ஆளும் கூட்டணியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா அல்லது லட்சிய ஜனநாயகக் கட்சியின் தனித்துப் போட்டி யாருக்குச் சாதகமாக அமையும் என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.
