பாராட்டுகள் மட்டும் போதாது… வேலை கொடுங்க!

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை வடிவுக்கரசி. தாய், அக்கா, வில்லி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த அவர், ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக உருக்கமாக பேசியுள்ளார்.

‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகை வடிவுக்கரசி, தனது சினிமா பயணம் மற்றும் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பொதுவாக யூடியூப் விமர்சனங்களை அதிகம் பார்ப்பதில்லை என்றாலும், ஒரு விமர்சகர் படத்தைப் பார்த்த பிறகு, “வெளியே வர மனமில்லாத அளவுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்தது” என்று கூறியதை பார்த்தபோது மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், அருணாச்சலம் திரைப்படத்திற்குப் பிறகு, கான் சிட்டி படத்தில் தனது நடிப்பைப் பலரும் பாராட்டி வருவது பெரும் சந்தோஷத்தை அளிப்பதாக கூறினார். அதேசமயம், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தனது நடிப்பை பாராட்டுபவர்கள், “வடிவுக்கரசிக்கு மேலும் பட வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்றும் பதிவு செய்தால், அது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கவனத்தை ஈர்க்கும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னொரு காலத்தில் நாளிதழ்களில் நடிகர்களைப் பற்றி எழுதப்பட்ட சிறிய பாராட்டுகள்கூட புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதுபோல தற்போது சமூக வலைதளங்களிலும் ஆதரவு கிடைத்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்றார். இப்படத்தில் நடித்துள்ள யோகி பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வருவதாக கூறிய அவர், தானோ வீட்டில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

பலரும் தனது நடிப்பை பாராட்டினாலும், தற்போது கையில் புதிய படங்கள் எதுவும் இல்லை என்றும், தனக்கு மிகவும் தேவைப்படுவது வேலைதான் என்றும் உணர்ச்சியுடன் பேசினார். மேலும், ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, சிறிய கால்ஷீட் கொண்ட கதாபாத்திரங்களுக்குக் கூட வாய்ப்பு கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஹரிஷ் துரைராஜை நோக்கி, “நீங்கள் எடுக்கும் படங்களிலாவது எனக்கு ஒரு நாள் வேலையாவது கொடுப்பதாக உறுதியளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, தனது நடிப்பு மீது நம்பிக்கை இருப்பதாகவும், உண்மையாகவே தனது நடிப்பு பிடித்திருந்தால், பாராட்டுகளுடன் மட்டுமல்லாமல் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்றும், அதுவே தன்னைப் போன்ற மூத்த கலைஞர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்றும் வடிவுக்கரசி உருக்கமாக தெரிவித்தார்.

Source link