வடக்கு டெல்லியில் இந்தலோக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) பிற்பகல் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட நிலையில், பலரால் மசூதிக்குள் தொழுகை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மசூதிக்கு வெளியே சாலை ஓரம் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தொழுகை நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி காலால் உதைத்துள்ளார்.
இதனைக் கண்ட இஸ்லாமியர்கள் சிலர் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு விரைந்த வடக்கு டெல்லி துணை ஆணையர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனிடையே தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எஸ்ஐ எட்டி உதைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிய நிலையில், கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து அந்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

