வேளச்சேரி டூ தரமணி MRTS… ரூ.14.4 கோடியில் 3.2 கி.மீ நடைபாதை திட்டம்- சென்னை மாநகராட்சி டெண்டர்! – velachery to taramani mrts stations pedestrian corridor plan in chennai

தென் சென்னையில் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை ஒட்டி நீண்ட நடைபாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டர் பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Velachery MRTS Taramani Corridor Tender Plan
வேளச்சேரி MRTS பறக்கும் ரயில் வழித்தடத்தை செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை நீட்டிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஷட்டில் சர்வீஸ் அடிப்படையில் இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையில் 3 ஜோடி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சில்க்ஸ் நோக்கி வரும் வழித்தடத்தில் வலதுபுறம் திரும்பினால் பறக்கும் ரயில் சேவையை ஒட்டிய பாதை ஒன்று செல்கிறது. இது பயன்பாடற்று, ஆள் நடமாற்றம் இன்றி காணப்பட்ட நிலையில், சாலைகள் புதுப்பிக்கப்பட்டன.

வேளச்சேரி MRTS ரயில் இணைப்பு
வேளச்சேரி MRTS ரயில் இணைப்பு

தெரு விளக்குகள், தடுப்புகள், முன்னெச்சரிக்கை பலகைகள், விளையாட்டு பயிற்சிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது முழு நீள தார் சாலை உடன் வாகனங்கள் சீரான போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் வழியாக எம்.ஜி.ஆர் சாலையை அடைந்து, அங்கிருந்து ஓ.எம்.ஆர் சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தரமணி ரயில் நிலையம் வரை நடைபாதை
தரமணி ரயில் நிலையம் வரை நடைபாதை

இதற்கு மாற்று சாலையாக வேளச்சேரி – தரமணி MRTS ரயில் நிலையங்களுக்கு இடையிலான சாலை முக்கியத்துவம் பெற்றது. பீக் ஹவர்களாக இருந்தாலும் சரி. மற்ற நேரங்களிலும் சரி. போக்குவரத்து நெரிசல் ஏதும் இருக்காது. இந்த வழித்தடத்தில் சென்றால் தரமணி MRTS ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து எளிதாக ஓ.எம்.ஆர் சாலைக்கு போய் சேரலாம். இந்நிலையில் இந்த வழித்தடத்தை ஒட்டி பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அகலமான நடைபாதையை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

சென்னை புறநகர் ரயில் கடைசி மைல் கனெக்‌ஷன்
சென்னை புறநகர் ரயில் கடைசி மைல் கனெக்‌ஷன்

3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு 14.44 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சி, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோரின் வழக்கமான பயன்பாடு போன்றவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக புறநகர் ரயில் சேவை உடன் கடைசி மைல் தொலைவுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய நடைபாதை திட்டம் பலனளிக்கும் என்கின்றனர்.

சென்னை மாநகராட்சி + உலக வங்கி நிதியுதவி
சென்னை மாநகராட்சி + உலக வங்கி நிதியுதவி

இந்த வழித்தடமானது மண்டலம் 13ல் பிரிவு 177 மற்றும் மண்டலம் 14ல் பிரிவு 182 ஆகியவற்றை கடந்து செல்கிறது. இதற்கான நிதியை உலக வங்கி உதவியுடன் சென்னை மாநகர கூட்டு ஒப்பந்த திட்டத்தின் அடிப்படையில் விடுவிடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஓ.எம்.ஆர் உடன் எளிதில் இணைப்பு
ஓ.எம்.ஆர் உடன் எளிதில் இணைப்பு

புதிதாக அமைக்கப்படவுள்ள வேளச்சேரி – தரமணி MRTS நடைபாதையானது எந்தவித தடைகளும் இன்றி முழுமையான வழித்தடத்தையும் கடக்கும் வகையில் இருக்கும். வாகனங்களால் எந்தவித சிரமமும் ஏற்படாது. அருகிலுள்ள பகுதிகளுக்கும் எளிதில் இணைப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும். மேலும் ஆங்காங்கு இருக்கை வசதிகளும், பார்க்கிங் வசதிகளும் செய்து தரப்படும். ஆக்கிரமிப்புகள், குப்பைகள் மேலாண்மை ஆகியவற்றை புதிய வழித்தடத்தில் மேற்பார்வை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.