தூங்கி வழியும் திமுக நிர்வாகம்… தொடரும் பாலியல் குற்றங்கள்- தவெக அருண்ராஜ் கண்டனம்! – tvk arunraj attacks dmk govt for violence against women in tamil nadu

தமிழகத்தில் பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது பற்றி தவெக அருண்ராஜ் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

TVK Arunraj against DMK Govt(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், படுகொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடைசியாக விளாத்திகுளம் சம்பவத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். இதில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் நீடித்து வந்தன. இவை அனைத்தும் திமுக அரசுக்கு எதிராக மாறின.

எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் எட்டு நாட்களை கடந்த பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்ம முனீஸ்வரன், இவர் ஏற்கனவே 60 வயது மூதாட்டியை 2020ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற ஜாமினில் இருக்கும் போதே பிளஸ் டூ மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

இது ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. 2020-ல் நடந்த பாலியல் குற்றச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு 2024-ல் நீதிமன்றம் நிபந்தனைகள் உடன் ஜாமீன் வழங்கியுள்ளது. இத்தகைய கொடுமையான குற்றங்களை செய்து நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளியே விடப்படும், குற்றவாளிகளை போலீசார் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நடைமுறை. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் குற்றவாளி, மீண்டும் அதே குற்றத்தை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருந்துள்ளார் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் ஒன்று. யாரையும் விட்டு விட மாட்டேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வெற்று வசனங்கள் எல்லாம், வெறும் ஜம்பங்கள் தான் எனத் தெரிகிறது. மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்கள் செய்ய துணியும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கும், நிர்வாக சீர்கேடும் புரையோடி போயுள்ளன.
இந்த கொடுமைகள் அனைத்திற்கு வரும் ஏப்ரல் 23 இல் முடிவு கட்டப்படும் என்று தவெக அருண்ராஜ் பதிவிட்டுள்ளார். அன்றைய தினம் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி அமைந்துள்ளது. எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் வாக்குகளும் பெரிதாக பிரியும். வெற்றி வாய்ப்பு குறைந்த வித்தியாசத்தில் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.