சென்னை,
இந்தாண்டு ஐபிஎல் சீசனை முன்னிட்டு, பஞ்சாப் அணியின் முன்னணி லெக்-ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹால் தனது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். வருகிற 28 முதல் தொடங்கும் இந்த தொடருக்காக அவர் தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்சினைகள் சந்தித்திருந்த சஹால், தற்போது தனது உடலுக்கு முக்கியத்துவம் அளித்து முழு பிட்னஸுடன் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசிய சாஹல், கடந்த 6 மாதங்களாக மதுபானத்தை முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும், 35 வயதில் தனது அணிக்காக 150 சதவீதம் ஆற்றலை வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறினார். 2013ஆம் ஆண்டு மும்பை அணியுடன் பட்டம் வென்ற சஹால், பின்னர் பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியும் கோப்பையை மீண்டும் வெல்ல முடியவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளை எடுத்துள்ள சஹால், தற்போது முழு உடல்நலத்துடன் மீண்டும் களமிறங்க தயாராக உள்ளார். வருகிற 31ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், அவர் மீண்டும் தனது ஸ்பின் மாயையை காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
