வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்யவே கூடாத, தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான தவறுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வருமான வரி கணக்கைத் ( ITR ) தாக்கல் செய்யும்போது சிறிய தவறுகளைச் செய்கிறார்கள். அது பின்னர் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கோ அல்லது வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருவதற்கோ வழிவகுக்கின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். அப்படி, வரு செலுத்துவோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
வரித் தாக்கல் செய்வது மிக முக்கியம்!
வரி தாக்கல் செய்யும் விஷயத்தில் மிகச் சிறிய கவனக்குறைவு கூட உங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை நேரடியாகப் பாதிக்கலாம். மக்கள் பெரும்பாலும் அவசரத்தில் படிவங்களை நிரப்புகிறார்கள். அடிப்படை விதிகளைப் புறக்கணிக்கிறார்கள். தரவுகள் தானாகவே பொருந்தும் என்று வரி செலுத்துவோர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. இந்தக் கவனக்குறைவு பெரும்பாலும் வரி திரும்பப் பெறுவதில் (refund) தாமதத்தை அல்லது வரித்துறையிடமிருந்து அபராத நோட்டீஸ் பெறுவதில் முடிகிறது. எனவே, ITR என்பது வெறும் காகித வேலை சார்ந்த நடைமுறை மட்டுமல்ல அது உங்கள் நிதி நிலையின் பிரதிபலிப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வங்கி விவரங்கள் மற்றும் AIS-ஐப் புறக்கணித்தல்!
மக்கள் செய்யும் மிகப்பொதுவான தவறு, தங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்கத் தவறுவது அல்லது அவற்றைப் புதுப்பிக்காமல் விடுவது ஆகும். பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கும். ஆனால் அவர்கள் தங்கள் வரி கணக்கில் ஒரு முதன்மைக் கணக்கை மட்டுமே குறிப்பிடுவார்கள். மேலும், வருடாந்திர தகவல் அறிக்கையை (AIS) முழுமையாகப் படிக்காமல் வரி கணக்கைச் சமர்ப்பிப்பது ஒரு பெரிய தவறாகும். இந்த அறிக்கையில் உங்கள் TDS மற்றும் வட்டி வருமானம் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கியிருக்கும். AIS-க்கும் நீங்கள் உள்ளிட்ட தரவுகளுக்கும் இடையே சிறிய முரண்பாடு இருந்தாலும் அது சிக்கலை உருவாக்கலாம்.
தவறான வரி விகிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்தல்!
வரியைச் சேமிக்கும் முயற்சியில் மக்கள் பெரும்பாலும் தவறான புதிய அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கள் நிதி நிலையை மதிப்பிடாமல் மற்றவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அதிக இழப்பை ஏற்படுத்தலாம். பிரிவு 80C-ன் கீழ் கிடைக்கும் பலன்கள் அல்லது பிற வரி விலக்குகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மறப்பது அல்லது உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது போன்றவற்றை மக்கள் செய்கிறார்கள். மேலும், கூடுதல் வருமானம் அல்லது ஃப்ரீலான்சிங் மூலம் ஈட்டிய பணத்தை மறைப்பதும் கடுமையான சட்ட மீறலாக அமையலாம்.
காலக்கெடு முடிந்த பிறகு அவசரமாகத் தாக்கல் செய்தல்!
மக்கள் பெரும்பாலும் காலக்கெடுவின் கடைசி நாள் வரை காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கடைசி நேரத்தில் அதிகப்படியான பயன்பாட்டால் இணையதளத்தின் சர்வர் வேகம் குறைகிறது. இதனால் தவறான தகவல்கள் அவசரமாகச் சமர்ப்பிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. காலக்கெடு முடிந்த பிறகு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது அதிக அபராதங்களுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், பல முக்கியமான வரிச் சலுகைகளை இழக்கவும் காரணமாகிறது. எனவே, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க உங்கள் ஆவணங்களை உரிய நேரத்தில் தயார் நிலையில் வைத்துக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Source link
