சென்னை,
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இன்னும் நான்கு நாட்களில் தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். இந்நிலையில் நாளை பகல் 12 மணிக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மாலை 4மணியளவில் பியூஸ்கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரை மறைவில் எந்தெந்த தொகுதிகள், எண்ணிக்கை எல்லாம் முடிவாகியிருக்க கூடிய நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து விட்டு இன்று சென்னை திரும்புகிறார்.
குறிப்பாக டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் இருவரும் இன்று டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் பியூஸ்கோயல் வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் 29 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை பாஜக கேட்கிறது. அந்த கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதற்காக கூடுதலாக அதிமுகவிடம் 8 தொகுதிகள் சேர்த்து 37 தொகுதிகள் வரை கேட்டு பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் எடப்பாடியை பொறுத்தவரை இந்த கட்சிகளை இரட்டை இலையில் நிறுத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
நாளை மாலை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்,செவ்வாய் கிழமைகளில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் இது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
