விமான கட்டணங்களை உயர்த்திய ஏர் இந்தியா.. இன்று முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ! – air india increases domestic and international airfares from today

மேற்காசிய பகுதியில் நிலவி வரும் அரசியல் மற்றும் போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சுற்றி உருவாகியுள்ள மோதல் காரணமாக விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா கட்டண உயர்வு

இந்த நிலைமையின் தாக்கம் விமான போக்குவரத்து துறையிலும் நேரடியாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

இன்று முதல் அமல்

அதன்படி விமான கட்டண உயர்வு இன்று (மார்ச் 12 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படாமல் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் சேவை செலவுகளும் உயர்ந்துள்ளதாகவும், அதனை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 399 வரை உயர்வு

முதல் கட்டமாக இன்று அதிகாலை முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் மற்றும் சார்க் நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கும் பயணச்சீட்டு கட்டணத்தில் ரூ. 399 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்காசிய நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.

அந்த பகுதிகளுக்கான விமானங்களில் பயணிக்க ரூ. 920 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா அறிவிப்பு

அந்த பகுதிகளுக்குச் செல்லும் விமானங்களில் சுமார் ரூ. 1,840 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு மேலாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. அந்த பகுதிகளுக்கான விமானங்களில் ரூ. 2,760 வரை கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமான சேவைகள் குறித்து முக்கியமான மாற்றமும் அறிவிக்கப்பட்டது. இதுவரை அந்த சேவைகளில் எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனி அந்த வழித்தடங்களிலும் விமான எரிபொருள் கட்டணம் சேர்க்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால்…

இரண்டாவது கட்டமாக மார்ச் 18 ஆம் தேதி முதல் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தூர இடங்களுக்கு செல்லும் விமான சேவைகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பின் படி ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களில் சுமார் ரூ. 2,300 வரை கட்டணம் அதிகரிக்கப்படும்.

அதேபோல் வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமான சேவைகளில் சுமார் ரூ. 4,594 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கான கட்டண உயர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்தது.

இந்தியாவை பாதிக்கும் புதிய வரி பிரச்சனை!

விமான பயணிகள் கவலை

ஏர் இந்தியா நிறுவனம் முதன்முதலில் இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ள நிலையில், மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் இதே போன்ற முடிவை எடுக்கலாம் என்று விமான துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக வரும் நாட்களில் விமான பயணச் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பயணிகளிடையே உருவாகியுள்ளது.

Source link