பட மூலாதாரம், SAJJAD HUSSAIN / AFP via Getty Images
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் தீப்கே (வலது) மற்றும் சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்பிரசுரிக்கப்பட்டது 25 ஜூலை 2026, 11:41 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம், நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி எனப் பலவற்றையும் கடந்து வந்துள்ள இந்தப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியுள்ளார்.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பி, ஆதரவுகளைப் பெற்ற இந்தப் போராட்டம் கடந்து வந்த பாதை எப்படியானது? இங்கு பார்ப்போம்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஜூன் 6ஆம் தேதியன்று காக்ரோச் ஜனதா கட்சி தனது முதல் போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தியது.
அபிஜித் தீப்கேவால் தொடங்கப்பட்ட ‘காக்ரோச் ஜனதா கட்சி’ டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜூன் 6ஆம் தேதியன்று தனது முதல் போராட்டத்தை நடத்தியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தொடர்ச்சியான தேர்வு முறைகேடுகள், மாணவர்களின் எதிர்காலம் குறித்த பரந்த கவலைகளை அதில் போராட்டக்காரர்கள் எழுப்பினர். அந்தப் போராட்டம் ஒரு பெரிய இயக்கத்திற்கான முன்னோட்டம் மட்டுமே ண்று அப்போது அபிஜித் தீப்கே பின்னர் விவரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூன் 20ஆம் தேதி, தங்களது ஆரம்பக்கட்ட கோரிக்கைகளுக்கு அரசிடம் பதில் கிடைக்கவில்லை என்று கூறி காலவரையற்ற போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 20ஆம் தேதியன்று, ஆரம்பக்கட்ட கோரிக்கைகளுக்கு அரசிடம் இருந்து தங்களுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனக் கூறி, காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூன் 28ஆம் தேதியன்று கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக், சிஜேபி-யுடன் இணைந்து ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூலை 18ஆம் தேதியன்று சோனம் வாங்சுக் டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக போராட்டக் களத்தில் இருந்து அகற்றப்பட்டு, சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே (இடது), ஜூலை 18, 2026 அன்று புது டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் காட்சி
தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்தக் காலவரையற்ற போராட்டத்தில் ஜூன் 28ஆம் தேதியன்று லடாக்கை சேர்ந்த கல்வியாளர், புதுமையான ஆராய்ச்சியாளர், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இளைஞர்களுடன் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக சோனம் வாங்சுக் எட்டு கிலோவுக்கும் மேல் எடை குறைந்ததாகக் கூறப்பட்டது
அவர் இதில் பங்கேற்றது தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, அரசின் மீதான அழுத்தமும் அதிகரித்தது.
ஆனால், டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் ஜூலை 18ஆம் தேதியன்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக போராட்டக் களத்தில் இருந்து அகற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சோனம் வாங்சுக் போராட்டக் களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது, நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவை இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரிக்க வித்திட்டன
பிறகு, ஜூலை 19ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்கு முந்தைய நாளில், 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சிஜேபி-யின் ‘சான்சத் சலோ (நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி)’ போராட்டத்திற்கு அனுமதி கோரப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லையென டெல்லி காவல்துறை தெரிவித்தது.
ஜூலை 20ஆம் தேதியன்று, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடுப்புகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது நாடு முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2026 ஜூலை 20 அன்று புது டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். காவல்துறை தடுப்புகளைக் கடக்க முயன்றபோது, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்களும் போலீசாரும் காயமடைந்தனர். சிஜேபி பேரணியின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிகைகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்தன, பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்தன. இந்த நிகழ்வு, ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஒரு முக்கிய தேசிய அரசியல் விவகாரமாக மாற்றியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறையின் தடியடியில் காயமடைந்த போராட்டக்காரர்கள் சாலையில் கிடக்கின்றனர் (படம்: ஜூலை 20)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிஜேபி ஆதரவாளர்களைக் கலைக்க, விரைவு அதிரடிப் படை (ஆர்ஏஎஃப்) வீரர் ஒருவர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது அதீத பலத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்படும் ஏராளமான படங்களும் வெளியாகியுள்ளன (படம்: ஜூலை 20)
அதைத் தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில், ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. காவல்துறை நடவடிக்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியது. பிறகு மத்திய அமைச்சர்கள் போராட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பொதுவான இடத்தில் சிஜேபி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலின்போது ஜன்னல்கள் உடைக்கப்பட்ட டெல்லி காவல்துறை பேருந்து (படம்: ஜூலை 20)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைதியான போராட்டங்களை மேற்கொள்ள காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்தது. மேலும், அரசின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் ஜூலை 24ஆம் தேதி ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். ஆனால், சிஜேபி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பேரணியின்போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கடுமையான வன்முறையை உபயோகித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூலை 24ஆம் தேதி ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சோனம் வாங்சுக் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட போதிலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதாக சிஜேபி அறிவித்தது
பட மூலாதாரம், PTI
படக்குறிப்பு, டெல்லியில் இரு தரப்புக்கும் பொதுவான ஓரிடத்தில் மத்திய அரசு சார்பாக ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரும், காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
மேலும், காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசு நாளை வரை அவகாசம் கோரியுள்ளதாக ஜூலை 24ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையில் எவ்வித சமரசமும் இல்லை என்று தெரிவித்தார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இன்று (ஜூலை 25) மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “இது ஜனநாயகத்தின் வெற்றி, நேரடியான ஜனநாயகம், நேரடியாக வீதிகளில் இருந்து உருவானது. இது அமைதி, பொறுமை, விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்று இதுகுறித்து சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, “இது இத்துடன் முடிந்துவிடவில்லை. கரப்பான் பூச்சிகளுடன் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றது முதல் இதுவரை இல்லாத வகையில், முக்கிய அரசியல் திருப்பமாக, இன்று (ஜூலை 25ஆம் தேதி), மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். பரந்த அளவிலான பொறுப்புக்கூறல், தேர்வு முறை சீர்திருத்தங்களுக்கான கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் அதேவேளையில், இந்த முன்னேற்றத்தை சிஜேபி ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என விவரித்தது.
“தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்டார், ஆனால் நீட் தேர்வு முறைகேடுகளால் தற்கொலை மூலை உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் இன்னும் இருப்பதாக” அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




















