ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக நீட் வினாத்தாள் கசிவு, நுழைவுத்தேர்வு முறைகேடு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் போராடி வந்தனர்.
இதன் விளைவாக தற்போது ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி, தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பாக முக்கியமான சில கருத்துக்களை பேசியுள்ளார்.
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. நீட் வினாத்தாள் கசிவிற்கு ஒன்றிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர். யாருமே பிஜேபி அரசை எதிர்த்து களத்தில் நிற்க முடியாது என்று ஒரு பொய்யை தொடர்ச்சியாக பரப்பி வரும் சூழலில், இந்தியாவில் இருக்கக்கூடிய இளைய தலைமுறையினர் நாடு முழுவதும் ஒரு போராட்டத்தை கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
எந்த அரசாங்கம் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது என்றிருந்த நிலையில், நாட்டின் மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்கு கிடைத்துள்ள வெற்றி. அடுத்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இது திமுக தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை. இது வெற்றி பெற்றால், நாங்களும் மகிழ்ச்சி அடைவோம் என தெரிவித்தார். அதோடு மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தாலே, நிச்சயமாக நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்பும் உள்ளது என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார் கனிமொழி.
முன்னதாக டெல்லியில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது, கனிமொழி நேரிலே சென்று தனது ஆதரவினை தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உங்களுடன் நாங்கள் இருப்போம் என நம்பிக்கையாக பேசினார். அதோடு திமுக எம்பி ஆ. ராசா, போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சென்று சந்தித்தார். இப்படி டெல்லி போராட்டத்திற்கு தொடர்ச்சியாக திமுக ஆதரவு தெரிவித்தது.
அதோடு சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் நடந்து வந்த போராட்டத்திலும் கனிமொழி பங்கேற்று பேசினார். இந்நிலையில் இன்றைய தினம் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது, போராட்டக்காரர்களை பெரும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனின் தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்தை திரும்பி பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழத்து தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எவ்வாறு திரும்ப பெறப்பட்டதோ, அதே போன்று நீட் தேர்வும் நிச்சயமாக ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
