தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் உடலுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், நேற்று குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அந்த மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்காரர்கள் செய்தனர். அந்த மாணவியில் வீட்டிற்கு சென்ற மக்கள் பிரதிநிதிகள், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த அஞ்சலி நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளருமான பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து (கிழக்கு), ராமசுப்பு (மத்திய), அன்புராஜன் (மேற்கு), இமானுவேல் (தெற்கு) உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
