2027 உலகக் கோப்பையில் இருவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அர்ப்பணிப்பை ஏற்று அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அணிக்கு சாதகமாக அமையும் என்றும், ஒரு வேளை புறக்கணிக்கப்பட்டால் அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பாண்டியாவை டிரேடிங் முறையில் மாற்ற விரும்பும் மும்பை அணி
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்கும் முன்பு ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் முறையில் மாற்ற விரும்பும் மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியாவுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே மற்றும் பெரிய தொகையையும் சிஎஸ்கேவிடம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியாவின் ஏல மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் என்பதால், மாத்ரே மட்டும் போதாது எனக் கூறி 10 கோடி ரூபாய் பணமும் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மாத்ரேவை ட்ரேட் செய்ய விரும்பாத சிஎஸ்கே, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சிவம் துபேவை உடன் 10 கோடி ரூபாய் பணமும் கொடுத்து பாண்டியாவை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியிலும் வெற்றிப் பெற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ், 49 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார்.
193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
