தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரிய கோட்டை முதல்வர் அலுவலகத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளார். காற்றோட்டமான, இயற்கை வெளிச்சம் நிறைந்த அலுவலகம், பாதுகாப்பு வசதிகள், வாஸ்து ஆலோசனைகள் உள்ளிட்ட பல காரணங்கள் இந்த மாற்றத்துக்குப் பின்னணியாக கூறப்படுகின்றன. இதற்காக பொதுப்பணித்துறை மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டிருப்பதாகவும், அவசர முடிவை எதிர்த்து விமர்சனங்களும் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய முதல்வர்களின் பல நடைமுறைகளிலிருந்து விலகி, தனக்கென புதிய அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அவரது நிர்வாக நடைமுறை, அலுவலக செயல்பாடு, அரசியல் பாணி என பல அம்சங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரிய ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோதிடம் காரணமா? எதிர்க்கட்சிகள் விமர்சனம்
பத்தாவது தளத்தில் இருந்தால்தான் முதல்வர் “உச்சத்தில் இருப்பார்” என்ற ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் அலுவலகத்தை அவசரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு நிர்வாக முடிவுகளில் ஜோதிடம் மற்றும் வாஸ்துவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த அலுவலக மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இதுதொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன.
மூன்று மாதங்களில் பணியை முடிக்க உத்தரவு
பொதுப்பணித்துறை செயலர் சுந்தரவல்லி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், தனியார் கட்டிட வடிவமைப்பாளர்கள், வாஸ்து நிபுணர்கள், ஜோதிடர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் ஆலோசனையின்படி, மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்து முதல்வர் அலுவலகத்தை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 10-வது தளத்துடன் சேர்த்து 9-வது தளத்தையும் முதல்வர் அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்லட் ப்ரூஃப் பாதுகாப்புடன் புதிய அலுவலகம்
புதிய முதல்வர் அலுவலகத்தில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடி, மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கும் பணியை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இருந்து சென்னை துறைமுகம் மற்றும் கடற்கரையை நேரடியாக பார்க்க முடிவது முதல்வரின் விருப்பத்திற்கும் ஏற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க சுமார் ஆறு மாதங்கள் தேவைப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஸ்து ஆலோசனையும் முக்கிய காரணமா?
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் முதல்வர் அலுவலகத்தின் வாஸ்து அமைப்பு தனக்கு சாதகமாக இல்லை என்ற கருத்தும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு அலுவலகத்தை மாற்றுவது நல்லது என்று தவெக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காற்றோட்டமான, இயற்கை வெளிச்சம் நிறைந்த அலுவலகம்
பல ஆண்டுகளாக தமிழக முதல்வர்கள் பயன்படுத்தி வந்த கோட்டை அலுவலகம் பாரம்பரிய கட்டிடமாக இருந்தாலும், இயற்கை காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் குளிர்சாதன வசதியையே நம்பியிருக்கும் இந்த அலுவலகத்திற்கு பதிலாக, இயற்கை சூழலை ரசிக்கக்கூடிய, பெரிய கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட, கார்ப்பரேட் அலுவலகத்தை ஒத்த வடிவமைப்பில் புதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
