கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
லேசான அறிகுறிகள்
வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கும் போது, அரசு மருத்துவமனைகள் இத்தகைய சூழலை எதிர்கொள்ளத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன. தாராளமான படுக்கை வசதிகள், தேவையான உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் போதிய மருத்துவப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது அல்லது இயல்பான அளவை விடத் தீவிரமாக உயரும் போது, உடலில் தடிப்புகள், தசைப்பிடிப்பு போன்ற லேசான அறிகுறிகள் முதல் மயக்கம் மற்றும் உயிரிழப்பு வரையிலான தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க மாநிலம் முழுவதும் ‘வெப்பச் செயல் திட்டங்களை’ (Heat Action Plans) தீவிரமாகச் செயல்படுத்த மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட அரசு மருத்துவமனைகள்
பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் அ. சோமசுந்தரம் இது குறித்துக் கூறுகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ் (ORS) பாக்கெட்டுகள், குளுக்கோஸ் ஏற்றும் திரவங்கள் (IV fluids) மற்றும் குளிர்விக்கும் உபகரணங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும், அவசர சிகிச்சைக்கு எனத் தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் ஏர்-கண்டிஷனிங் மற்றும் இதர குளிர்ச்சியூட்டும் சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்குத் தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீண்ட கால நடவடிக்கையாக மருத்துவமனைகளின் மேற்கூரைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வண்ணம் ‘கூலிங் ரூஃப்’ (Cool-roofing) மற்றும் கூடுதல் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரத்யேக இணையதளப் பக்கங்கள்
வெப்ப பாதிப்பால் வரும் நோயாளிகளைக் கண்காணிக்கவும், உடனுக்குடன் தகவல்களைப் பதிவு செய்யவும் பிரத்யேக இணையதளப் பக்கங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கே. சாந்தாராமன் கூறுகையில், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். ஒருவருக்குத் தலைச்சுற்றல், அதிக காய்ச்சல் அல்லது மனக்குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும், ஏனெனில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வெளிப்புற நிகழ்வுகள்
மேலும், பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை நடத்துபவர்களுக்குச் சுகாதாரத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான குடிநீர் வசதி, நிழற்கூடாரங்கள் மற்றும் அவசர மருத்துவ முதலுதவி குழுக்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் வெப்ப அலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் கோடைக்கால வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
