2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி அரசியல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், கூட்டங்களில் பங்கேற்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் களமிறங்கவும் அவர் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள், முக்கிய நிர்வாகிகளின் விலகல்கள் மற்றும் தொடர்ச்சியான அரசியல் சவால்கள் காரணமாக கட்சியின் கட்டுப்பாடு தளர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒருங்கிணைத்து வந்தாலும், முக்கிய நிர்வாகிகளை பாரபட்சமின்றி நீக்கியது, அதிகார மையப்படுத்தலுடன் செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
விஜய் வருகைக்குப் பிறகு மாறிய அரசியல் களம்
விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் போட்டியின் மையம் மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.தமிழகவெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேயான போட்டியே முக்கியமானதாக மாறிய நிலையில், அதிமுகவின் அரசியல் செல்வாக்கு குறைந்ததாக கூறப்படுகிறது.
2026 தேர்தல் தோல்வி அதிமுகவுக்கு பின்னடைவு
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. மேலும், தேர்தலுக்கு முன் திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகள் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி சில முக்கிய தலைவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.
30-ஆம் தேதி விசாரணை; எம்எல்ஏக்கள் மீது கவனம்
ராஜினாமா செய்த ஆறு எம்எல்ஏக்கள் தொடர்பான விசாரணை வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களுடன் தொடர் ஆலோசனை
அதிமுகவில் உள்ள 85 மாவட்ட அமைப்புகளின் நிலை குறித்து அறிய, மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தினார். ஜூன் 13-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. அதேபோல் சில எம்எல்ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலே அடுத்த இலக்கு
உள்ளாட்சித் தேர்தலில் அதிகபட்ச வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் முழுமையாக களத்தில் இறங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியேறும் முக்கிய நிர்வாகிகள்…என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
இடைத்தேர்தலுக்காக முழுவீச்சில் பிரச்சாரம்
ராஜினாமா செய்த ஆறு எம்எல்ஏக்களின் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி நேரடியாக களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீக்கப் பட்டியல் தயாரா? செயற்குழுவுக்கு முன் அதிரடி
மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில், கட்சிக்குள் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒத்துழைப்பு இல்லாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, புதிய நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டத்தை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
