‘என் மகனின் மரணத்துக்கு எந்த இழப்பீடும் ஈடாகாது’ தற்கொலை செய்து கொண்ட நீட் மாணவரின் தந்தை உருக்கம்

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர்கேரியை சேர்ந்த ரித்திக் (வயது 21) என்ற மாணவர் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதியிருந்தார். இது அவரது 3-வது முயற்சி ஆகும். ஆனால் முறைகேடு காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது ரித்திக்கை பெரும் மன உளைச்சலில் ஆழ்த்தியது. அயராது உழைத்து 3-வது முறையாக தேர்வு எழுதியும், பலன் இல்லை என்பதை அவரால் ஏற்க முடியவில்லை. எனவே தேர்வு ரத்து செய்யப்பட்ட 2-வது நாளில் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது இழப்பில் இருந்து இதுவரை அந்த குடும்பம் மீளவில்லை. இந்தநிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் காரணமாக மத்திய மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.

கொடூரங்களை தவிர்த்திருக்கலாம்

இதுபற்றி ரித்திக்கின் தந்தை அனுப் மிஸ்ரா கூறும்போது, ‘இளம் தலைமு றையினர் தளராத உறுதியுடன் வருங்கால தலைமுறைக்காக கல்வி முறையை மறுசீரமைக்குமாறு அரசை கட்டாயப்படுத்தினர். அமைதியான முறையில் போராடிய அவர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலை பார்த்தபோது நெஞ்சம் நொறுங்கியது. மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னரே ராஜினாமா செய்திருந்தால், இந்த கொடூரங்களை தவிர்த்திருக்கலாம்.

வெற்றிடத்தை நிரப்பாது

இந்த நிகழ்வுகளை காண என் மகன் இப்போது நம்முடன் இல்லை என்பதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போராட்டம் நாடு முழுவதும் உள்ள மற்ற இளைஞர்களுக்கு பயனளிக்கும்’ என கண்ணீருடன் கூறினார்.நீட் முறைகேட்டால் உயிர் நீத்த மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கும் இழப்பீடு குறித்து அவர், ‘எந்த இழப்பீடும் என் மகனின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பாது’ என்று விரக்தியுடன் கூறினார்.

Source link