முறைகேடாக பெறப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ் ரத்து – தமிழக அரசு உத்தரவு

சென்னை,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பழங்குடியினர் சமூகத்தினருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை பெறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை பலர் முறைகேடாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்றிருப்பது தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு சமூகநீதித்துறை செயலாளர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.

பழங்குடியினர்

இதுதொடர்பாக அவர், கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் உள்ள காணிக்காரன், காணிக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே வசித்து வரும் நிலையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், 1.1.2018 முதல் 26.5.2026 வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு காணிக்காரன், காணிக்கர் சமூகம் என்ற அடிப்படையில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் இதர மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை கலெக்டர்கள் விசாரிக்க வேண்டும். முறைகேடாக சான்றிதழ் வழங்கியிருந்தால் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Source link