அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்

தென்காசி,

அரசு பள்ளியில் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயமடைந்தனர். ஆசிரியை மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பிரம்படி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேன்மரியசுகந்தி (வயது 44) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் இவர், கடந்த 20-ந்தேதி மாலை சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு வகுப்பறையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சத்தமாக பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி அந்த வகுப்பறைக்கு சென்று, மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

கைகளில் பலத்த காயம்

இதில் மாணவிகள் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வகுப்புகள் முடிந்ததும் அந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். மாணவிகள் பவித்ரா மற்றும் சுஜித்ரா ஆகியோர் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பவித்ரா மட்டும் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆசிரியை மீது வழக்கு

சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி ஆகிய மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கைகளில் இன்னும் வீக்கம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆசிரியை தேன்மரியசுகந்தி மீது பி.என்.எஸ் சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு எழுத முடியவில்லை

இந்தநிலையில், பவித்ராவின் தாயார் ராஜாத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வீ.கே.புதூரை சேர்ந்த எனது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி தேன்மரியசுகந்தி என்ற ஆசிரியை எனது மகள் உள்பட பல மாணவர்களை பிரம்பால் தாக்கினார். ஆசிரியையின் செயல்பாடு குறித்து வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும், எனது மகளுக்கு காயம் காரணமாக இடைப்பருவ தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link