மேற்கிந்தியத் தீவுகள் சென்ற பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 311/10 ரன்களை அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பௌலர் ஜஸ்டீன் கிரேவ்ஸ், 5 ஓவர்களில் 5 மெய்டண்களை வீசி, 5 விக்கெட்களை எடுத்தார்.
பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 244/4 என்ற ரன்களை அடித்து, ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருந்தனர். இந்நிலையில், 64ஆவது ஓவரை வீசிய ஜஸ்டீன் கிரேவ்ஸ் ஷான் மசூத் விக்கெட்டை எடுத்து, ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்கவில்லை.
அடுத்து, 66ஆவது ஓவரில், ஆமிர் ஜமால் விக்கெட்டை எடுத்து, ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து, 68ஆவது ஓவரில் அலி உஸ்மான், 70ஆவது ஓவரில் முகமது ரிஸ்வான் ஆகியோரது விக்கெட்களை எடுத்து, ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்கவில்லை. தொடரச்சியாக, 72ஆவது ஓவரின் கடைசி பந்தில், கடைசி விக்கெட்டான அப்பாஸ் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
அதாவது, 64, 66, 68, 70, 72 ஆகிய ஓவர்களை வீசி, அதில் ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல், ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டை, ஜஸ்டீன் கிரேவ்ஸ் எடுத்துக் கொடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி, 244/4 என்பதில் இருந்து, 282/10 ரன்களை எடுத்து, 29 ரன்கள் பின்தங்கிய நிலையில், முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கவிம் ஹெட்ஜ் 183 பந்தில் 84 ரன்களையும், சாய் ஹோப் 182 பந்துகளில் 92 ரன்களையும் எடுத்து அசத்தினார்கள். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 311/10 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் பௌலர், முகமது அலி 21.5 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். முகமது அப்பாஸ் 3 விக்கெட்களையும், குரரம் ஷாசாத் 23 ஓவர்களில் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணியில், இமாம் உல் ஹக் 63 (102), ஷான் மசூத் 109 (184) ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். மற்ற எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 282/10 ரன்களை எடுத்து, 29 ரன்கள் பின்தங்கியது.
மேற்கிந்தியத் தீவுகள், 2ஆவது இன்னிங்ஸ்: 29 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், எந்த பேட்டராலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சந்தர்பால் 35 (101) மட்டுமே ஓரளவுக்கு பெரிய ரன்களை அடித்தார். மற்ற பேட்டர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணி, இதுவரை 126/7 ரன்களை எடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னமும், 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. பிட்ச், தொடர்ச்சியாக வேகத்திற்கு சாதகமாக மாறியுள்ளது. இதனால், ஏற்கிந்தியத் தீவுகள் அணி, 200 ரன்களை இலக்காக வைத்தாலும், பாகிஸ்தான் அணிக்கு, அது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
