மராட்டியம்: தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 18 பேர் பலி

தானே

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

மராட்டியத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில், தானே மாவட்டத்தில், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

790 பேர் பாதிப்பு

நிலச்சரிவுகள், சுவர் இடிந்து விழுந்தது மற்றும் ஆறுகளில் வெள்ளம் ஆகியவற்றால் 229 குடும்பங்களை சேர்ந்த 790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நடப்பு பருவமழை காலத்தில், இதுவரை 17 பேர் காயமடைந்து உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

இந்த மாதத்தில், மும்பையுடன் கூட தானே மாவட்டத்திலும் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் சுவர்கள் இடிந்து விழும் சம்பவங்களும், வெள்ளப்பெருக்கும் காணப்படுகின்றன.

கடந்த 24-ந்தேதியில் இருந்து, 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நீர் நிலைகளில் மூழ்கியும் விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கனமழையால், மொத்தம் 187 வீடுகள் முழுவதுமோ அல்லது பகுதியளவோ சேதமடைந்து உள்ளன. பலத்த காற்று வீசியதில் 5 குடிசைகள், சமூக நல கூடம் ஒன்று மற்றும் அங்கன்வாடி மையம் ஒன்றும் சேதமடைந்துள்ளன. கனமழையால், 3 கோழிப்பண்ணைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

Source link