தமிழகத்தில் குடிநீர் கேன், பாட்டில் விலை திடீர் உயர்வு

சென்னை,

ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியால் கச்சா எண்ணை இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது மறைமுகமாக பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. 20 லிட்டர் கேன் விலை ரூ.5 உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருவதாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்க தலைவர் கூறுகையில்,

ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து சூழல்களையும் சமாளித்து மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகித்து வருகிறோம். தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வு, வேலை ஆட்கள் சம்பளம் அதிகரிப்பு, மின் கட்டண உயர்வு காரணமாக குடிநீர் விலையை உயர்த்தும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த விலை ஏற்றம் என்பது எங்களின் சங்கத்தை சேர்ந்த முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 1840 நிறுவனங்களின் குடிநீருக்கு மட்டும் தான் பொருந்தும். சிலர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக பாட்டில்களில் கேன்களில் அடைத்து தாங்களே விலை நிர்ணயித்து விற்பவர்களுக்கு இந்த விலையேற்றம் பொருந்தாது என்றார்.

Source link